கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உடல் நிலை சோர்வடைந்த நிலையில் ஐஸ்வர்யா அஸ்வத் என்ற 7 வயது சிறுமியை Perth குழந்தைகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அச்சிறுமியின் பெற்றோர் அனுமதித்தனர்.
அக்குழந்தையின் உடல் நிலை மோசம் அடைந்ததை கண்ட அந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக தங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த செவிலியர்களை பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் அச்சிறுமிக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்த சிகிச்சையும் கொடுக்கப்படாத நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வலியுறுத்திய நிலையில், ஆஸ்திரேலிய மருத்துவ கழகம் குழந்தையின் உயிரிழப்புக்கான காரணத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது.
அதே நேரம் ஐஸ்வர்யா மரணம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஆஸ்திரேலிய செவிலியர் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பு சார்பாக பேசிய செவிலியர் சங்கத்தின் செயலாளர் Mark Olson, மருத்துவமனையில் நிலவிய செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடந்த டிசம்பர் மாதமும், கடந்த மார்ச் 9 ஆம் தேதி தனக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சராசரியாக ஒரு செவிலியர் 11 நோயாளிகளை கவனிக்கும் நிலைக்கு செவிலியர்கள் தள்ளப்பட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் செவிலியர்களின் கோரிக்கை குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் Olson தெரிவித்துள்ளார். தற்போது செவிலியர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐஸ்வர்யா அஸ்வத் மரணத்திற்கு காரணம் மருத்துவமனையின் கவனக்குறைவே என்று குற்றம்சாட்டியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் Cook, இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கமளிக்க சுகாதாரத்துறை இயக்கநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய மருத்துவ கழகத்தின் மாநில தலைவர் Andrew Miller, இந்த சம்பவம் குறித்து பேசிய போது சுகாதாரதுறையில் நிலவும் நிதிப்பற்றாக்குறையும், செவிலியர்கள் தட்டுப்பாடும் ஆஸ்திரேலிய மருத்துவமனைகளின் பாதுபாப்ற்ற நிலையை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் Cook கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு 11% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காரணமாக பிற மாநிலங்களில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் செவிலியர்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர், ஐஸ்வர்யா குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு சிறுமியின் உயிர் இழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.