குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு பிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த காவல் துறையினர் அடங்கிய பலதுறை குழு ஒன்று இணையதளங்களில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் குறித்து கண்காணித்து வந்தது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை மேற்கொள்ளப்ப்பட்ட கண்காணிப்பில் 5 வயது முதல் 12 வயதுள்ள குழந்தைகளை குறிவைத்து ஒரு கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இக்கும்பல் இணையம் மூலமாக அக்குழந்தைகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி தவறான பாதைக்கு அழைத்து சென்றதும் உறுதிசெய்யப்பட்டது.
இக்கும்பலை பிடிக்க வடக்கு பிராந்திய காவல்துறை கமேண்டர் Lauren Hill தலைமையில் பலதுறை குழு அமைக்கப்பட்டது.
இக்குழு வடக்கு பிராந்திய பகுதிகளில் உள்ள Darwin, Mataranka, Alice Springs இடங்களிலும், குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள மவுண்ட் கார்னெட் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டது. சுமார் 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு பிராந்தியம் பகுதிகளை சார்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 வயது முதல் 52 வயது நபர்கள் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
அதில் மேற்கு ஆஸ்திரேலியா பகுதியை சேர்ந்த ஒருவர் மீது 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை கண்காணிப்பாளர் Matthew Ballarad, இணையக்குற்றங்களை தடுக்க தங்கள் அதிகாரிகள் முழு வீச்சில் செய்ல்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் குழந்தைகள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கமேண்டர் Hill தெரிவித்துள்ளார்.