மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனி வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு ஜெர்மனியின் Ahrweiler கவுண்டி மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 90 பேர் வரை காணாமல் போயிருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். Rhine-Westphalia மாகாணத்தில் மட்டும் 43 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஜெர்மனியில் கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெல்ஜியத்திலும் 27 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.
தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் வெள்ளம் சற்ற வடியத்தொடங்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் மீட்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தின் போது அடித்து செல்லப்பட்ட கார் மற்றும் கன ரக வாகனங்களில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பெருவெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல், இது ஒரு மோசமான பேரழிவு என்றும் , இந்த கடினமான சூழ் நிலையை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளை போலவே நெதர்லாந்தின் தெற்கு பகுதியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஸ்விசர்லாந்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லூசிரின் நகரத்தின் பாலங்களில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் பருவ நிலை மாற்றம் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லண்டன் இம்பிரியல் கல்லுரியின் பருவ நிலை மாற்றத்திற்கான துறை பேராசிரியர் ரால்ப் டவுமி, புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றத்தை வேகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புவியின் வெப்பம் சராசரியாக 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது பல இடங்களில் கனமழையும், பெருவெள்ளமும் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Link Source: https://ab.co/3xR8PRl