பாஸ்டில் தினத்தன்று உங்களின் திட்டம் என்ன என்று ஏதேனும் ஒரு பிரெஞ்சு குடிமகனை கேட்டால் சற்று ஆச்சர்யத்துடன் தான் நம்மை பார்ப்பார்கள். ஏனெனில் பாஸ்டில் தினம் குறித்த வெவ்வேறு புரிதல்கள் வெவ்வேறு நாட்டு மக்களிடையே உள்ளது.
இந்நிலையில் பாஸ்டில் தினம் குறித்த வரலாற்று பின்னணியை தெரிந்துக்கொள்வது அவசியம்.
சர்வாதிகாரத்தின் அடையாளமாக விளங்கிய பாஸ்டில் சிறைக்கதவுகளை பாரிஸ் நகர மக்கள் உடைத்து அரசியல் கைதிகளை விடுவித்த தினம். பிரெஞ்சு புரட்சியின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் இது ஒன்றாகும்.
1789 ஜூலை 14 ல் இல் அரங்கேறிய பிரெஞ்சு புரட்சி முக்கியத்துவம் வாய்ந்த நவீன கால புரட்சியாகும்.
அனைத்து மக்களும் சமம் என்று அது முழங்கியது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை முன்வைத்தது.
பாஸ்டில் சிறை என்பது பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கோட்டை மட்டுமல்ல. அந்நாட்டின் பிரதான சிறையும் ஆகும். அரசியல் கைதிகளை அடைக்கும் இடம் என்பதுடன் மன்னராட்சியின் அடையாளமாகவும் அது கருதப்பட்டது.
1688 முதல் 1783வரை பிரான்சும் பிரிட்டனும் ஐந்து நீண்ட போர்களில் ஈடுபட்டன. இதன் விளைவாக அரசு கஜானா காலியாகி இருந்தது. அரசின் வரிக் கொள்கையால் ஏற்கனவே கடும் நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் மீது அரசு மேலும் கடும் சுமையை ஏற்றியது.
16ம் லூயி மன்னனின் வரிக்கொள்கையை எதிர்த்த நிதி அமைச்சர் ஜாக் நேக்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறப்பு அடிப்படயில் அனைத்து சலுகைகளும் தீர்மானிக் கப்பட்டதால், ஏழைகள் முன்னேற வழியே இல்லாத சூழல் நிலவியது.சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
1789 ஆண்டு நிதி அமைச்சர் மன்னரால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் மன்னரின் ராணுவம் தங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பாஸ்டில் சிறையை முற்றுகை இட்டனர்.
அந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இறுதியில் பாஸ்டில் சிறை மக்கள் வசம் வந்தது.
சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் எடுத்த ஒரு புரட்சி வெற்றியடைந்தது.
1789 ல் நிலபிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, குடிமக்களின் சாசனம்’ பிரகடனப்படுத்தப்பட்டது. 21.9.1792. அன்று பிரான்ஸ் குடியரசு என்று அறிவிக்கப்பட்டது.
பின்னாட்களில் லூயி மன்னன் கழுவிலேற்றப்பட்டார்.
பிரான்ஸ் தன்னுடைய வரலாற்று நெடுகிலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தேசிய தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 1804-1814 வரையில் ஆட்சிபுரிந்த முதலாம் நெப்போலியன் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை தேசிய தினமாக கொண்டாட அறிவுறுத்தினார். 18 ஆம் லூயி ஆகஸ்ட் 25 மற்றும் மே 24 ஆகிய நாட்களை கொண்டாட கட்டளையிட்டார்.
1848-1852 இடையிலான காலகட்டத்தில் மே 4 ஆம் தேதியை தேசிய தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
இது போல ஒரு நூற்றாண்டில் பிரான்ஸ் சுமார் 6 முறைக்கு தேசிய தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Link Source: https://ab.co/3zdlQoC