இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து , காத்துக் கொள்ள 2 விதமான தடுப்பூசிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனம் அஸ்டிராஜெனிக்கா இனைந்து உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு, தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் முன்களப்பணியாளர்களுக்கு முதல் கட்டமாகவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டாலும் பல மாநிலங்கள் ,தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இத்திட்டத்தை தொடங்கவில்லை.
இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி சார்பாக சிறுவர்களுக்கு தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றின் துணையுடன் கோவேக்சின் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் 2 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, ஆரோக்கியமாக இருக்கும் 525 தன்னார்வலர்கள் மீது அடுத்தகட்ட பரிசோதனைகளை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூரில் உள்ள மெடிட்டிரினா மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், குழந்தைகள் மீது கொரோனா தடுப்பூசியை பரிசோதித்து பார்க்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே ரேபிஸ், போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகளை புதிதாக பிறந்த குழந்தைகள் மீதும் செலுத்தி பரிசோதனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவை பாதுகாப்பான தடுப்பூசிகள் என உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே இம்முறையும் பாதுகாப்பான இந்திய சமூகத்தை உருவாக்க குழந்தைகள் மீது கொரோனா தடுப்பூசியை செலுத்தி ஆய்வு செய்யவுள்ளோம் என்று கூறினார்.
Link Source: https://bit.ly/3fhq1aN