தமிழகத்தில் கடந்த 11ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்ற தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளை பயன்படுத்தி தேவையின்றி மக்கள் வெளியில் சுற்றித் திரிவதால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் குருணை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற நேரங்களில் தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 12 மணிக்கு மேல் திறந்து வைக்கப்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் முக கவசம் அணிவது சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்து, காவல்துறையின் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும், வியாபாரிகளை தேவையின்றி வற்புறுத்துதல் கூடாது என்றும் தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் காவல்துறையினரின் மென்மையான போக்கை மதிக்காமல் விதிமீறலில் ஈடுபட்ட நிலையில் அதிரடி நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அது 30 குழுக்களாக அதிகரிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.