ரத்தத் தொற்று காரணமாக பெர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புலம்பெயர் தமிழ் சிறுமியான 4 வயது தாருணிகா சிசிக்சை முடிந்து மருத்துவமனயில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது தந்தை மற்றும் சகோதரியுடன் இணைந்த சிறுமி மற்றும் அவரது தாயார் பிரியா உள்ளிட்ட 4 பேரும் வழக்கு முடியும் வரை தற்காலிகமாக பெர்த் சமூக தடுப்பு முகாமில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியா நடேஸ் குடும்பத்தினர் மீண்டும் பிலோலா தீவில் நிரந்தரமாக தங்க வைக்க கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் அவர்களது 4 வயது மகள் தாருணிகா தீவிர ரத்தத் தொற்று காரணமாக பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே தாய் மற்றும் சிறுமி மட்டுமே பெர்த் வர அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை நடேஸ் மற்றும் மற்றொரு மகளான கோபிகா ஆகியோர் கிறிஸ்துமஸ் தீவிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களை குடும்பத்துடன் சேர்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பிரியாவும், அவர்களது குடும்ப குடியேற்ற வழக்கறிஞர் உள்ளிட்டோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், துணை பிரதமர் மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் அனுமதியின் பேரில் பிரியா நடேஸ் குடும்பம் இணைந்திருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். கடந்த வாரம் பெர்த் மருத்துவமனைக்கு வந்த நடேஸ், கோபிகா மற்றும் நண்பர்கள் பிரியா, தாருணிகாவுடன் இணைந்தது உணர்ச்சிப் பெருக்கான தருணமாக அமைந்தது. இந்நிலையில் தங்களை மீண்டும் ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பிரியா நடேஸ் குடும்பத்தினரை மீண்டும் பிலோலா தீவுக்கோ, அல்லது கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு முகாமுக்கோ அனுப்ப முடியாது என்றும் பெர்த்தில் உள்ள சமூக தடுப்பு முகாமில் தற்காலிக வசிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பிலோலாவில் வசிப்பதையே தாங்கள் பாதுகாப்பாக கருதுவதாகவும், தங்களை மீண்டும் அங்கேயே குடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் பிரியா கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், குடியேற்ற வழக்கறிஞர், அவர்களது குடும்ப நண்பர்கள் உள்ளிட்ட பலரும் இரண்டு சிறுமிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் புகலிக் கோரிக்கை கொண்டுள்ள தமிழ்க்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்க முடியாது என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார். மருத்துவ சிகிக்சைக்கும், நீதிமன்ற வழக்கு தொடர்பாக வசிக்க அனுமதி அளிப்பது இங்கு குடியேற்றம் செய்வதற்கான வழி அல்ல என்றும் குடியேற்றத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
Link Source: https://ab.co/35CyfG0