ஆஸ்திரேலியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது வரை 36 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த 51 வயது பெண்ணுக்கு அண்மையில் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவருக்கு அரிதிலும் அரிதாக ஏற்படும் ரத்த உறைதல் பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக ஆஸ்திரேலிய மருத்துவப்பொருள் நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி பால் கெல்லி, இது துரதிருஷ்டவசமானது என்றும், அப்பெண்ணின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இது தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைதல் பாதிப்பு என்பது சுமார் 48 நபர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 15 பேருக்கு பாதிப்பு கடுமையாக இருந்ததாகவும், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருந்து பொருள் நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைதல் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெண்ணின் உயிரிழப்பு செய்தி வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தற்போது விரைவாக கண்டறிவதாக முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி கெல்லி தெரிவித்துள்ளார். தற்போது 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பைசர் தடுப்பூசி செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/2ToNeQQ