சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் முக்கிய சந்திப்பு 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சந்திப்பில் 400க்கும் மேற்பட்ட மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பல்வேறு முக்கிய நிர்வாகிகளை நியமித்து அதிபர் ஷி ஜின் பிங் உத்தரவிட்ட நிலையில், இந்த முக்கிய தலைவர்களின் சந்திப்பில் அடுத்த ஓராண்டுக்கு அதிபராக தொடருவார் என்ற வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் வரலாற்றில் மூன்றாவது முறையாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும், சீனாவின் எதிர்கால திட்டங்களை மாற்றமின்றி நிலையாக முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல், வலுவான அதிகாரம் கொள்கை உறுதி கொண்ட ஷி ஜின் பிங் இடம் உள்ளதாகவும் அதன் காரணமாக அவரே தொடரலாம் என்றும் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன கலாச்சாரத்தின் முழுமுதல் அடையாளமாக ஷி ஜின் பிங் திகழ்வதாகவும் உறுப்பினர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
பல்வேறு நாடுகள் உடனான உறவில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் தற்போது ஷி ஜின் பிங் அதிபராக தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பார் என்ற தீர்மானம் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு சீனாவிற்கு புத்துணர்வை அளித்திருப்பதாகவும், மக்களை ஏமாற்றும் வகையில் எந்த முடிவையும் மத்தியக் குழு எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக 5 ஆண்டுகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளராக ஷி ஜின் பிங் நீடிப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு வரை அதிபராக ஷி ஜின் பிங் நீடிக்க உள்ள விவகாரம் கட்சியின் இருபது ஆண்டுகால பராம்பரியத்தையே மாற்றி அமைத்துள்ளது என்றும் பொலிட் பீரோ உறுப்பினர்களளால் கூறப்படுகிறது.
Link Source: shorturl.at/fpGMO