செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் மெல்போர்ன் விமான நிலைத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது விசா ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள, தனக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்று ஜோகோவிச் வலியுறுத்தினார். நீண்ட பரிசீலனைக்கு பிறகு போட்டி அமைப்பு குழுவினரும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதி விலக்கு கிடைத்திருப்பதாக கூறிய ஜோகோவிச், துபாய் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு உற்சாகமாக புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் மெல்போர்ன் சென்றடைந்தார்.
ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்குரிய முறையான மருத்துவ சான்றிதழ்களை அவர் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது. மருத்துவ விதிவிலக்குக்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படைஅதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து, நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் பல மணி நேரம் அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. பிறகு குடியுரிமை சோதனையில் சிக்குவோர் தங்கவைக்கப்படும் ஓட்டலுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை நாட்டிற்கு திருப்பி அனுப்பவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நோவக் ஜோகோவிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் செர்பியாவையும், செர்பிய மக்களையும் அவமதிக்கும் செயல் என்று ஜோகோவிச்-ன் தந்தை ஆஸ்திரேலியா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலகின் சிறந்த நிலை ஆட்டக்காரர் ஒருவரை தடுத்து நிறுத்துவதற்கான காரணம் விளையாட்டு மட்டுமே அல்ல என்றும் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் Srdjan Djocovick தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த விவகாரத்தில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும், சட்டபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் கிடையாது. எல்லையில் பின்பற்றப்படும் வலுவான கொள்கையால் தான் ஆஸ்திரேலியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும், கொரோனா தடுப்பு கண்காணிப்பு தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்றும் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்ட விவகாரம் கடும் கண்டனத்திற்கு உரியது என்று செர்பியா அரசு தமது கண்டனங்களை ஆஸ்திரேலியாவுக்கு பதிவு செய்துள்ளது. உலகின் தலைச்சிறந்த ஒரு டென்னிஸ் வீரர் தரக்குறைவாக நடத்தப்பட்ட பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சர்வதேச பொது சட்டத்துக்கு உட்பட்டு ஜோகோவிச்சுக்கு நீதி கிடைக்க செர்பியா முழுமையாக போராடும் என்று செர்பியா அதிபர் Alexander Vucic தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு டென்னிஸ் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் விளையாட்டு வீரர்கள் தடுப்பூசி விவகாரத்தில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
Link Source: https://ab.co/3n8mKzk