கோல்ட் கோஸ்ட்-ல் உள்ள வீடுகளின் கொல்லைப்புற பகுதியில் எரிந்த நிலையில் இளம் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
அதிகாலை 6.40 மணிக்கு அதிக அழுகுரல் சத்தம், வெடித்து எரியும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 27 வயதான Kelly Wilkinson உடலை கைப்பற்றினர். அங்கிருந்து சில கட்டடங்களுக்கு அப்பால் Kelly Wilkinson-ன் 34 வயதான முன்னாள் கணவர் Brian Johnston மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின் Jhonston-ஐ போலீஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்தியதில்
Kelly Wilkinson மரணத்தில் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பவ நேரத்தின் போது, Johnston காயங்களோடு ரத்தம் சொட்ட ஒடியதை பார்த்ததாக அருகில் வசிப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். வீட்டுக் கதவு ஒன்றின் கைப்பிடியில் இடித்துக் கொண்டதில் இடது கை மணிக்கட்டு கடுமையாக காயம் அடைந்துள்ளதாக நியூஸ்9 -க்கு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீட்டருக்கு அப்பால் ஸ்பைக்ஸ் கோர்ட் பகுதியில் வேறொரு புறவாசல் பகுதியில் Johnston மயக்கமுற்று விழுந்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோல்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் Johnston சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Wilkinson வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று அங்கு குடியிருக்கும் மற்ற நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏதாவது முக்கிய தடயம் சம்பவ இடத்தில் கிடைக்கும் என்றும், அப்பகுதியை முழுமையாக தடை செய்து அங்கு விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் விசாரணை அதிகாரி Brendan கூறியுள்ளார்.
உயிரிழந்த Wilkinson குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கும், அவரது குழந்தையை பராமரிக்கவும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 20 ஆயிரம் டாலர் என்ற இலக்கில் 6 ஆயிரம் டாலர் நிதி திரட்டப்பட்டு உள்ளது. இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் குழந்தையின் பராமரிப்பு மற்றும் படிப்பு செலவுகளுக்கு நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், Johnston ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் தொடர்பான விவரம் தெரிந்தால் 1800 333 000 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.