கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நேரடியாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் திரையுலகில் உச்ச விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிய நடிகரான Chris Rock தனது நகைச்சுவையான பேச்சால் அரங்க அதிர வைத்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது விழா நடைபெறுகிறது. இதில் நடிகர் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். அவர் King Richard படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது பெறும் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி Jada Pinkett Smith உடன் வந்திருந்தார். நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் நோய் காரணமாக தலைமுடி முழுவதுதையும் இழந்து இருந்த அவர் குறித்த Chris Rock நகைச்சுவையாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையில் முடிந்துள்ளது.
இந்த தோற்றத்தில் G I Jane 2 படத்திற்காக அவர் காத்திருப்பதாகக் கூறி சிரித்துக் கொண்டே கூறிய கருத்தால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடைக்கு ஏறிச் சென்றார்.
அங்கு பேசிக் கொண்டிருந்த Chris Rock –ஐ கன்னத்தில் அறைந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் நடைபெற்ற இந்த சம்பவம் அரங்கில் கூடியிருந்த நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்கிக்கு உள்ளாக்கியது. அறைந்த பின்னரும் தனது தொகுப்புரையை நிறுத்தாத கிரிஸ் ராக் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்கர் அகாடமி, கிரிஸ் ராக் பேச்சு பல்வேறு மேடைகளில் ரசிக்கப்பட்டுள்ளது என்றும், பல நீண்ட தடைகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இது போன்ற சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளது. வன்முறையை எந்த வடிவத்திலும் தாங்கள் ஏற்பதும், மன்னிப்பதும் இல்லை என்றும் ஆஸ்கர் விழா ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், இது போன்ற வன்முறை சம்பவங்களை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், தனது செயலுக்கு வில் ஸ்மித் தனது ஏற்புரையில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியது குறித்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. காதல் இது போன்ற செயல்களை உங்களை செய்ய வைக்கும் என்று கண்ணீர் மல்க பேசிய வில் ஸ்மித், நடைபெற்ற சம்பவத்திற்கு ஆஸ்கர் அகாடமி, சக நடிகர்கள், கிரிஸ் ராக் உள்ளிட்டோரிடம் மன்னிப்பு கோருவதாக கூறினார்.
அலோபீஷியஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள Jada Pinkett Smith தனது தலைமுடியை முழுவதும் இழந்துள்ளார். பச்சை நிற உடையில் அவர் விருது வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த நிலையில் கிரிஸ் ராக் பேச்சு அவரை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. கிரிஸ் ராக் பேச்சின் போது முகபாவனைகளை மாற்றிய Jada Pinkett Smith அந்த சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார்.
இதனை அடுத்தே வில் ஸ்மித் மேடைக்கு ஏறிச் சென்று கிரிஸ் ராக்-கை கன்னத்தில் அறைந்தார்.
தொடர்ந்து பல்வேறு விருது வழங்கும் விழக்கள், திரை விழாக்களில் இது போன்ற நகைச்சுவை கலந்து பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து இதே போன்ற பாணியை கிரிஸ் ராக் பின்பற்றி வருவதாகவும், ஆனால் தனி நபர் தோற்றத்தை, உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதை உணர வேண்டும் என்றும் பல்வேறு விவாதங்கள் இந்த சம்பவத்தை ஒட்டி நடைபெற்று வருகின்றன.
Link Source: https://ab.co/3iK6aTH