அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள யோசெமிட்டி தேசியப் பூங்கா உலகப் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள செக்வோயா மரங்கள் இந்நிலப்பரப்புக்கு முக்கிய அடையாளமாக உள்ளது. இங்கு தற்போது பெரியளவில் காட்டுத் தீ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில மரங்கள் நூறாண்டுகள் பழமையானவை. அவற்றை தாவரவியல் விஞ்ஞானிகள் பாதுகாத்து வருகின்றனர். தற்போது அந்த மரங்களும் காட்டுத் தீ அபாயத்தி சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய யோசெமிட்டி தீயணைப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் நேன்சி ஃப்லீப், பூங்காவிலுள்ள 500 செக்வோயா மரங்களுக்கு காட்டுத் தீ அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மரங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று கூறினார்.
எனினும் பூங்கா பகுதிக்குள் இருக்கும் தெளிப்பான்கள் மூலம் தீ பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக மரங்கள் மீது தண்ணீர் தெளிக்கப்படுவது தீப்பிழம்புகளைத் தடுக்க போதுமானதாக இருக்கும். இந்த காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக நேன்சி ஃப்லீப் தெரிவித்தார்.