விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எந்தவிதமான சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் தனது எதிர்காலத்தை ஆஸ்திரேலியாவில் கழிக்க வேண்டும் என்று அமெரிக்கா வழக்கறிஞர்கள் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இவரை நாடு கடத்த தடை விதித்து பிரிட்டன் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராகவும், ராணுவ இரகசியங்களைக் கசிய விட்டமைக்கான விசாரணைக்காகவும் அமெரிக்க அரசு புதன்கிழமை பிரிட்டன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இரு நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின் பிரிட்டன் நீதிபதி வனெஸ்ஸா பரைட்செர் தனது தீர்ப்பில் அசாஞ்சேவை நாடு கடத்துவது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு நிகரான அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க அரசு பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு எதிரான மனுத்தாக்கல் செய்துள்ளது. 2010 இல் விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்ட 500 000 ஆவணங்களில், ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவ முற்றுகை தொடர்பான ரகசியங்கள் அடங்கியிருந்தன. இதனால் சுமார் 18 வித முறைப்பாடுகளை அசாஞ்சே அமெரிக்க அரசின் மூலம் எதிர்கொள்கின்றார்.
இவர் அமெரிக்காவில் தண்டிக்கப் பட்டால் குறைந்த பட்சம் சுமார் 175 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அவரது சிறைக் காலம் முழுவதையும் ஆஸ்திரேலியாவில் கழிப்பதற்கான உரிய அனுமதியை அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
Link Source: shorturl.at/oGJW5