ஆஸ்திரேலியாவின் வாரின்கா தொகுதியில் லிப்ரல் கட்சி சார்பாக போட்டியிடுபவர் கேத்ரீன் டேவிஸ். அந்நாட்டைச் சேர்ந்த பிரபல ஊடகத்துக்கு அவர் பேட்டியளித்த போது, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை என்பது உடல்களை சிதைக்கப்பட்டு செய்யப்படும் கொடூரமான சிகிச்சை என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே இவர் பால்புதுமையினர் குறித்து சர்ச்சையாக ஒருமுறை கருத்து பதிவு செய்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மன்னிப்புக் கோரி சமூகவலைதளத்தில் பதிவிட்டார். சமீபத்தில் அந்த பதிவை நீக்கியதை தொடர்ந்து மீண்டும் திருநங்கை மற்றும் திருநம்பி சமூகத்தினரை குறித்து விமர்சனம் செய்துள்ளார். கேத்ரீன் டேவிஸ் பேசியதற்கு பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக, இதுபோன்ற சிகிச்சைகள் இளம் பருவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல். இதை சாதாரண செயல்முறை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மோரீசன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவின் திருநர் சமூகத்தினரிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு கீழுள்ளவர்களுகு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி கிடையாது. தங்களுடைய வாழ்க்கையை குறித்து பிரதமர் மோரீசன் மிகவும் தவறான தகவல்களை பொதுவெளியில் பதிவு செய்துள்ளது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆந்தோனி அல்பானீஸ், ஒவ்வொரு மனிதர்களும் மதிக்கப்பட வேண்டும். மக்களை ஒருங்கிணைக்கும் வழிகளை தான் அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களை பிளவுப்படுத்தும் அரசியலை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.