பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்ஜெட்டுக்கு பின்னர் பொருளாதார நிலை என்னவாகும், வரி விதிப்புகள் காரணமாக ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், ஆறு மாத காலத்திற்கு கலால் வரி குறைப்பு, 420 டாலர் வரை வரி குறைப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி 250 டாலராக மாற்றுவது உள்ளிட்டவை பட்ஜெட் பிறகான நிலையாக மாறும் என்றும் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை மக்களின் தனிநபர் செலவினங்களில் எதிரொலிப்பதாக கருவூலக் காப்பாளர் தெரிவித்துள்ளார். வேலையின்மை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருப்பதாகவும், அரசு தனது ஊழியர்களுக்கான அதிக அளவிலான ஊதிய உயர்வை அறிவிக்கிறது என்றும் கருவூலக் காப்பாளர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பணவீக்கத்தை விட ஊதியம் அதிகமாக இருக்கும் என்றும், வரவு செலவு அடிப்படையில் மக்களின் ஊதியத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பணப்பலன்கள் மற்றும் போன்ஸ்கள் உள்ளிட்ட ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர் சந்தை இறுக்கமாக இருந்த நிலையை போக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் இது பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவாது என்றும் கருவூலக் காப்பாளர் தெரிவித்துள்ளார்.
நிதிக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 2024ம் ஆண்டு வரை வட்டி விகிதங்கள் உயரத்தொடங்கும் என்றும், இதன் காரணமாக பல்வேறு துறைகளில் கட்டணங்கள் உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணங்களில் உள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கால கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கான நிதி நிலை என்பதில் பணவீக்கம் எதிரொலிக்கத் தொடங்கும் என்பதால், அதற்கேற்ப வருமான வரி உள்ளிட்ட வரி விதிப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துளள்னர். 2022 பொது பட்ஜெட் தொழிலாளர் நலன் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த இழப்பை ஈடுகட்டும் வகையிலான வரி அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தேச பாதுகாப்புக்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று உத்தரவாதத்தை நிச்சயம் அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கடுமையான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்தையும் ஒருங்கிணைத்த நிதிநிலை அறிக்கையாக இருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போதைய நிலைமையை கட்டுக்குள் வைக்கும் அளவுக்காவது பட்ஜெட் இருக்கும் என்று நிதி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Link Source: https://ab.co/3wKr2lV