கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகொண்ட மருத்துவ விடுதிகள் அமைக்கப்படும் என மார்க் மெக்கவுன் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் மருத்துவ விடுதிகளை கட்டமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை.
இந்நிலையில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது. அதனால் சுகாதாரத் துறை பாதிக்கப்படுவதற்கு முன்னதாக, மருத்துவ விடுதிகளை கட்டமைக்கும் முடிவை மாநில அரசு கைவிட்டுள்ளது. அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில், அது நிறுத்தப்பட்டுவிட்டது. ராயல் பெர்த் மருத்துவமனையில் மட்டும் நான்கு படுக்கை வசதி கொண்ட மருத்துவ விடுதி தேர்தல் வாக்குறுதியின் படி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முர்டாக் மருத்துவ விடுதி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இதை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஜூண்டாலப் என்கிற பகுதியில் அமையவிருந்த மருத்துவ விடுதிகள் முக்கிய கவனத்தை பெற்று வந்தன. தற்போது அந்த அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதை அடுத்து, ஜூண்டாலப் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆம்பர் – ஜேடு சாண்டர்சன், ஜூண்டாலப் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ விடுதிகளை விடவும் பல்வேறு பயனுள்ள திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதற்காக பெரும் முதலீடு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சுமார் 102 படுக்கைகள் கொண்ட பெரும் மருத்துவ விடுதியாக அதை கட்டமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆம்பர் ஜேடு ஆண்டர்சன் மக்களவை பதிலளித்தார்.