இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தினமும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அச்சமடைந்த அதிபர் கோட்டபய ராஜபக்ச, முன்னதாகவே தனது தனது மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
ஆனால் போராட்டம் நடத்தும் யாரும் எந்த பொருட்களையும் சேதப்படுத்தவில்லை. யாரும் எதையும் எடுத்துச் செல்லவில்லை. அதிபர் மாளிகை முழுவதும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள உணவுகளை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவதும், ஷோபாவில் சிலர் அயர்ந்து தூங்குவதும் மற்றும் காய்கறிகளை எடுத்து சமைத்துச் சாப்பிடுவதும், வேறு சிலர் மாளிகை வளாகத்திலுள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற காணொலி, புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
நேற்று மாளிகையிலுள்ள ஒரு பதுங்கு குழியில் பணக் கட்டுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டெடுத்தனர். அவற்றின் மதிப்பின் 17.85 மில்லியன் என்று தெரியவந்துள்ளது. அனைத்தும் புதிய வங்கிக் நோட்டுகளாக உள்ளன. இந்த பணத்தை போராட்டக்காரர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் பணத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் இலங்கையின் அனைத்து கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிபர் வீட்டுக்குள் நுழைந்துள்ள போராட்டக்கார்கள் சர்வதேச ஊடகங்களிடம் பேசுகையில், ராஜபக்ச குடும்பத்தினரும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்யும் வரை தாங்கள் இங்கேயே இருக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். அவர் பதவி விலகிய பிறகு மாளிகையை விட்டு வெளியே சென்று கொண்டாடுவோம் என்றும் போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அந்நாட்டின் சபாநாயகர் அபேவர்தனா யாபா கூறுகையில், கோத்தபயா இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாகவும் வரும் 13-ம் தேதி அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் கோட்டபய ராஜபக்ச இருக்கும் இடத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.