விக்டோரியா மாநிலத்தின் கடற்கரை நகரமான ஜீலாங் பகுதியில் விவா நிறுவனம் இயற்கை எரிவாயு முனையத்தை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு உள்ளூர்வாசிகள், பொதுமக்கள், பள்ளி நிர்வாகங்கள், மருத்துவமனை நிர்வாகங்கள் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக ஒன்றுபட்டுக் குழுக்களாக உருவாகி சுமார் 2043 கடிதங்கள் இந்த திட்டத்துக்கு எதிராக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதிக்கு ஆபத்து, சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் தங்களுடைய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சியில் விவா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எரிசக்தி தேவை அதிகரித்துள்ளது. தற்போது உக்ரைன் போர் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கான எரிசக்தி வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டிலேயே எரிசக்தியை தயாரிக்கும் முயற்சி தேவை என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
ஆனால் அதற்கெல்லாம் பொதுமக்கள் செவிசாய்ப்பதாக இல்லை. ஏற்கனவே ஜீலாங்கில் அமைந்துள்ள ஜீலாங் கடற்கரை பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் விவா நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. விரைவில் அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போராடும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.