பிரபல பெண்ணிய ஆர்வலரும் மற்றும் யூ.டி.எஸ் வணிகக் கல்லூரியின் பேராசிரியருமான ஆனி சம்மர்ஸ், தேர்வு: வன்முறை அல்லது வறுமை என்கிற பெயரில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில், வன்முறை நிறைந்த உறவுகளை விட்டு வெளியேறும் பெண்கள் வறுமையில் தள்ளப்படாமல் இருக்க, அரசு அவர்களுக்கான அவசர கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு பெண்கள் நலன் குறித்து ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளை வைத்து, தன்னுடைய ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஆனி சம்மர்ஸ். ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையை எதிர்கொண்டு வரும் பெண்கள் பலர், அதை விட்டு வெளியேறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு காரணம் வறுமை. உறவை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் வறுமை அவர்களை அச்சமடையச் செய்கிறது. இதனால் தங்களுடைய துயரங்களை மறைத்து குழந்தைகளுக்காக பெண்கள் பலர் வன்முறையை சகித்துக் கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சமூகமும் அதற்கு தகுந்தபடி இல்லை என்பது மேலும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. ஒற்றைப் பெற்றோராக பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியுமா என்பது பெரும் கேள்வியாகிவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதை விட, அவர்கள் மேலும் வறுமையை அனுபவிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதற்கான கட்டமைப்புகள் நம்முடைய நாட்டில் இயற்கையாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆனி சம்மர்ஸ் தனது ஆய்வில் கூறியுள்ளார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், அதை விட்டு வெளியேற ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் தைரியத்துடன் வெளியேறி, நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான சமூகத்தை நாம் உருவாக்க தவறியுள்ளோம். ஒற்றை தாய்மார்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால் அவர்களுக்கான மேம்பாட்டுக்கு அவசரக் கொள்கையை உருவாக்க வேண்டிய நேரமிது. அதை அரசுக்கு உணரவைப்பதற்காகவே இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆனி சம்மர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.