ஆஸ்திரேலியாவில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு மாநில எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகள் மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விக்டோரியா மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மேத்யூ கை மாநிலத்தின் முறைமன்ற நடுவர் மற்றும் ஊழல்-எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவுக்கு நிதியை அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
அதன்படி சுதந்திரமான பரந்த அடிப்படையிலான ஊழல் எதிர்ப்பு ஆணையத்தையும் பொதுநல வழக்கு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தங்களுடைய கட்சி வெற்றி அடைந்தால், ஊழல் எதிர்ப்பு ஆணையத்துக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்படும் எனவும் உறுதிமொழி அளித்துள்ளார். இதுதொடர்பாக விக்டோரியா மாநில அமைச்சர் பென் கரோல் வெளியிட்டுள்ள கருத்தில், எதிர்க்கட்சி தலைவர் மேத்யூ கை எதற்கும் பயனளிக்காத மற்றும் நடைமுறைக்கு சாத்தியப்படாத உறுதிமொழிகளை கூறி வருகிறார். மக்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விக்டோரியா மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி எதிர்க்கட்சி பெரியளவில் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் விக்டோரியா மாநிலம் மீது பலருடைய கவனம் அதிகரித்துள்ளது.