ஸ்வஸ்த்திகா சின்னத்துக்கான தடை உத்தரவு இந்து, புத்தம், சமணம் மதங்களை பின்பற்றுவோருக்கு பொருந்தாது என அறிவிப்பு.
யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த நாஸிக்களின் ஸ்வஸ்த்திக்கா சின்னத்துக்கு விக்டோரியா மாகாண அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக இருப்பது விக்டோரியா. அங்கு அவ்வப்போது யூதர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் அவதூறு எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் ட்விர் அப்ராமோவிச் சட்டப்போராட்டம் மேற்கொண்டு வந்தார். அதன்படி நாசிக்களின் ஸ்வஸ்த்திகா சின்னத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற முறையீட்டை முன்னெடுத்து வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக அவர் மேற்கொண்டு வந்த முயற்சிக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி விக்டோரியா நாடாளுமன்றத்தில் ஸ்வஸ்த்திக்கா சின்னத்தை தடை செய்வதற்கான மசோதா வெற்றிக்கரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் குறிப்பிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு 15 ஆயிரம் டாலர் அபராதமும் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் யூதர்களுக்கு எதிராக ஸ்வஸ்த்திக்கா சின்னத்தை வைத்து எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த 22 ஆயிரம் பேர் மீது தற்போது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்வஸ்த்திகா சின்னத்தை நாஸிக்கள் இல்லாமல் இந்து, புத்தம் மற்றும் சமண மதங்களை பின்பற்றுபவர்கள் கூட பயன்படுத்தி வருகின்றனர். இந்த மதங்களில் குறிப்பிட்ட இச்சின்னம் அமைதியை குறிக்கிறது. அதனால் இந்த தடை உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது என விக்டோரியா பாராளுமன்றம் கூறியுள்ளது.