ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டு உள்ள நிலையில் பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானொலி ஒன்றுக்கு பேசிய பிரதமர் ஸ்காட் மாரிசன், தடுப்பூசி வழங்கல் விவகாரத்தில் ஏற்பட்டு்ள்ள குழப்பங்களுக்கு மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளார். குறிப்பிட்ட இலக்கை அடைவதில் பெரும் இடர்கள் இருந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது அலையில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பால் கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பகுதி ஊரடங்கு நடவடிக்கையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மெடிக்கல் அசோசியேஷன் இந்த விவகாரத்தில் பிரதமர் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்று கூறப்பட்ட நிலையில் பெருமளவு தடுப்பூசிகள் வராது அதன் காரணமாகவே இவ்வளவு பெரிய பாதிப்பை சந்திக்க நேரிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மன்னிப்பு கோரியதை அடுத்து அவர் உரிய தலைமை பண்புடன் இந்த விவகாரத்தில் நடந்து கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாகவும் புதன்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோரிசன் கூறியுள்ளார். தடுப்பூசி விவகாரத்தை பொரறுத்த வரை அதில் முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி விவகாரத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளை தான் தொடர்ந்து மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அஸ்ட்ராசெனகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் தொடர்ந்து பயன்பாட்டில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் அனைத்து வயதினருக்கும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று பிரதமர் தன்னிச்சையாக அறிவித்ததாகவும் சில விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/3eNb1SH