ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸின் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சில மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் புதிய திட்டத்திற்கான ஒப்புதலை தேசிய அமைச்சரவையின் அவசர கூட்டம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் முதியோர் பராமரிப்பாளர் களுக்கான கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பின்படி நிறுவனமயமாகவும் மற்றும் வீடுகளிலேயே முதியோர்களை பராமரித்து வரும் பராமரிப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து முதியோர் பராமரிப்பாளர் களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள Jude Clarke, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத் துறையில் இருந்து வருகிறார். அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்கிற இந்த முடிவை தங்கள் துறையில் பணியாற்றும் சிலர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அவர்களில் சிலர் இன்னும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இதுதொடர்பான கலந்துரையாடல் தங்கள் இடைவேளை நேரத்தில் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நர்சிங் ஹோமில் முதியோர் பராமரிப்பாளர்களாக பணியாற்றுபவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பதாகவும், அவர்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேரமாக பணியாற்றும் நபர்களில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் குழப்பம் நிலவுவதாகவும் Jude Clarke தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசி திட்டம் மிக அவசியமானது தான் என்ற போதிலும் இன்னும் தடுப்பூசி குறித்த அச்சம் பெரும்பாலான முதியோர் பராமரிப்பு அவர்களிடம் நிலவி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தடுப்பூசி கட்டாயம் என்ற நிலையை ஏற்றுக் கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும் என்றும் Jude Clarke கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி திட்டத்தில் முதல் முன்னுரிமை தளத்தில் முதியோர் பராமரிப்பாளர்கள் இருந்து வரும் நிலையில், இன்னும் தடுப்பூசி குறித்த பல்வேறு வதந்திகள் மற்றும் தேவையற்ற தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக United Workers Union-ன் Carolyn Smith தெரிவித்துள்ளார். தடுப்பூசி நடவடிக்கைகள் தொடங்கி இத்தனை மாதங்கள் கழித்தும் இன்னும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளாத முதியோர் பராமரிப்பாளர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நர்சிங் ஹோமில் பணியாற்றும் முதியோர் பராமரிப்பாளர்கள் மற்றும் வீடுகளில் பணிபுரிவோர் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் Carolyn Smith கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்கள் காரணமாக சிலர் இந்த வேலையை விட்டு வெளியேறுவதாகவும், இதனால் முதியோர் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு அவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் சிறப்பானது என்றும், இதை சரியான முறையில் செயல்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சில சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/2U9kqMN