உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வருகிறார் அதிபர் செலன்ஸ்கி. இந்நிலையில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், போர் நிறுத்தம் செய்வதற்கு போதுமான உதவிகளை செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதே நிலை மற்ற நாடுகளுக்கு ஏற்படுவதற்கு நீண்ட காலம் ஆகப்போவதில்லை என்று எச்சரித்த செலன்ஸ்கி இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
MH17 ரக விமான விபத்து குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்ட அதில் உயிரிழந்த ஆஸ்திரேலியகள் குறித்தும் உருக்கமுடன் பேசினார். இதே போன்று ஒவ்வொரு நாட்டுக்கும் மோசமான பல நினைவுகள் உள்ளதாகவும் அவை பேரிழப்பை ஏற்படுத்திய கோரமான சம்பவங்கள் என்றும் செலன்ஸ்கி குறிப்பிட்டார். ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது பெர்லின் சுவர் குறித்த பனிப்போரை குறிப்பிட்டு செலன்ஸ்கி உரையாற்றினார்.
பெர்லின் சுவரோடு உக்ரைன் நிலையை குறிப்பிட்டு பேசிய செலன்ஸ்கி, உக்ரைனை கூட்டணியில் சேரவிடாமல் தடுக்கும் நேட்டோவின் முடிவுகள் வெறும் அரசியல் அல்ல. அது புதிய சுவருக்கான கற்கள் என்றும் செலன்ன்கி கூறியுள்ளார். உக்ரைனில் விழும் ஒவ்வொரு குண்டுகளும் அமைதிக்காக எடுக்கப்படும் முடிவுகளை சீர்குலைக்கிறது என்றும் வருத்தத்துடன் செலன்ஸ்கி பதிவு செய்துள்ளார்.
மேற்குலக நாடுகளிடம் உக்ரைன் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், ரஷ்யா மீது பதில் போர் தொடுப்பதற்கான ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும், உக்ரைன் மீதான ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
போருக்கான எந்த விதமான காரணமும் இன்றி உக்ரைன மீதான படையெடுப்பை தொடங்கிய ரஷ்யாவுக்கு எதிராக அசாத்திய தைரியத்தையும், உறுதியையும் உக்ரைன் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாகவும் இதனை தாங்கள் வரவேற்பதாகவும் ஆஸ்திரேலிய வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் Stoward Robertகூறியுள்ளார்.
உக்ரைனுக்கு 65 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதநேய உதவிகளை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. மேலும், 91 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ள ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கான ராணுவ உதவி, உடனடி தேவையாகவும் தொடர்ந்து நீடிக்கக்கூடியதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது. ஐ.நா. மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் முதல் ஜப்பான் நாடாளுமன்றம் வரையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களின் கூட்டங்களில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.
பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்கின்றனர். அவருடைய பேச்சு, மேற்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உக்ரைனுக்கான ஆதரவை திரட்டும் தகவல் போர் என விவரிக்கப்படுகிறது.
Link Source: https://ab.co/3K7DrnV