ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்தித்துக்கொள்ளும் AUKMIN 2022 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இரு துறைகளைச் சார்ந்த செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் முதன் முறையாக அமைச்சர்கள் சந்தித்து பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை மேற்கொண்டு உள்ளனர். இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வது, AUKUS ஒப்பந்தத்தின் வழியாக அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பில் கவனம் செலுத்துவது, இங்கிலாந்தின் ராணுவ தளவாடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காவிட்டால் இங்கிலாந்து அல்லது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது உடனடியாக எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்ட தாகவே இருக்கும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார். அதே நேரத்தில் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான பயிற்சிகளை தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேவையைப் பொறுத்து அந்த திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தீங்கு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வரும் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதே தற்போதைய முதல் வேலையாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறையை சேர்ந்த 4 அமைச்சர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
கால மாற்றத்திற்கு ஏற்ப, தேவைகளுக்கு ஏற்ப இரு நாடுகளும் தங்களது உறவில் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அது பாதுகாப்பு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எதிரொலிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் Marise Payne
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவால் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் உக்ரைன் நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3FPZvk8