ஆஸ்திரேலியாவில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளதார மந்த நிலையை சரிசெய்வது குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வந்த பிரபல ஆய்வு நிறுவனமான KPMG தனது ஆய்வறிக்கையை அரசுக்கு வழங்கி உள்ளது.
பொருளாதார நிலையை சரி செய்ய அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் செய்ய வேண்டியவை குறித்து அதில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது KPMG நிறுவனம்.
ஆஸ்திரேலியா அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தலா மூன்றரை லட்சம் திறன்மிக்க வேலையாட்களை இதர நாடுகளில் இருந்து உள்வாங்க வேண்டும் என்றும், இதன் மூலமாக 120 பில்லியன் டாலர் அளவுக்கு வரக்கூடிய வருமானம் ஆஸ்திரேலிய பொருளதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் 2028 – 2029ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியும் 4.4 சதவீதம் அளவுக்கு உயரும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர்தொழிலாளர்களின் வருகை பெருமளவு தடைபட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு பணியாளர்கள் அதிக அளவு சென்று இருப்பதாகவும் KPMG நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கணக்கியல், வரி, நிதி உள்ளிட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுகளை 145 நாடுகளில் நடத்திவரக் கூடிய பிரபல நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியாவின் நிதி நிலைமை மற்றும் பொருளாதார மந்த நிலை குறித்து ஆய்வு நடத்தி இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
KPMG நடத்திய ஆய்வின் அடிப்படையில் 5 ஆண்டுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்வாங்கியதில் சர்வதேச அளவில் ஏழாவது நாடாக ஆஸ்திரேலியா இருப்பதாகவும், சராசரியாக 8 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான தொழிலாளர்கள் சீனா, இந்தியா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளன.
ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்ட 44 துறைகளில் திறன்மிக்க பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அதன் அடிப்படையில் பெருந்தொற்று நிறைவடைந்ததும் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Link Source: https://bit.ly/3t9wmNQ