ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சென்றிருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு முதல் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து மேற்கொள்கிறது. பாதுகாப்பு காலநிலை மாற்றம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தடையற்ற வர்த்தகம் ஆகியவற்றில் இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரையிலான வரிகள் அனைத்தும் பெருமளவு குறைக்கப் படுவதாகவும் இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதி இறக்குமதி கணிசமாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் சந்தித்து வரும் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் விடுமுறை கால விசா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட கொள்கை வடிவிலான ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ்-ல் தயாரிக்கப்படும் உயர் ரக மதுபானங்கள் முதல் கார்கள் வரை இனி அனைத்தும் தடையின்றி ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் என்றும், ஆஸ்திரேலிய விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த இங்கிலாந்தில் மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். மிகச் சரியான ஒப்பந்தத்திற்காக காத்திருந்ததாகவும், அது தற்போது இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் இது நாடுகளும் சம அளவில் பலன் பெறும் என்றும் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் தொற்றால் உலகளாவிய சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலமாக அவற்றிலிருந்து மீண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் விரிவான மற்றும் இலக்குடன் கூடிய இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுக்கு குறிப்பிட்ட பலனை தரும் என்றும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இரு நாட்டிலும் விடுமுறை கால விசாவில் 80 நாட்கள் வரை தங்கி தங்களது வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாகவும், இதன்மூலம் பரஸ்பரம் இரு நாடுகளும் அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உயர் ரக மதுபானங்கள், அரிசி உள்ளிட்ட 99% பொருட்கள் மீதான இறக்குமதி தடையை இங்கிலாந்து நீக்கி உள்ளதன் மூலமாக ஆஸ்திரேலியாவில் இருந்து அனைத்து விதமான பொருட்களும் தங்குதடையின்றி ஏற்றுமதி செய்யப்படும் என்று இருநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நீச்சல் உடைகள் உணவு பொருட்கள் பிஸ்கட் மற்றும் மாமிச வகைகள் இனி பிரிட்டனில் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், இங்கிலாந்து தயாரிப்பான கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி ஆகியவற்றுக்கு 5% வரி விலக்கு அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், சாதாரண விவசாயிகள் முதல் மிகப்பெரும் வர்த்தகர்கள் வரை அனைவருக்கும் பலனளிக்கக் கூடியது என்றும் வர்த்தக நிறுவனங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.
Link Source: https://bit.ly/3xoZLmb