கொரோனா தொற்றின் எண்ணிக்கை மிகத்தீவிரமாக அதிகரித்துள்ள இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடைகளும், கட்டுப்பாடுகளும் விதித்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கான விமானப் போக்குவரத்து முழுவதுமாக முடங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோஹா வழியாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரலாம் என்பதை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தோஹா வழியாக பயணம் செய்து நேரடியாக வருகை புரிந்ததன் மூலம் இது ஒரு செயல் விளக்கமாக மாறியுள்ளது. மேலும், எந்தவித புதிய பயண விதிமுறைகளும் இல்லாமல் பழைய விதிமுறைகளை பின்பற்றியே அவர்கள் பயணம் செய்து வந்துள்ளனர்.
இதனிடையே, இந்தியாவின் நிலையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு முழு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக
பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். விடுதிகளில் தனிமைப்படுத்துவதை தவிர்க்க நேரடி விமானங்கள் அனைத்தும் மே மாதம் 15ம் தேதி வரை நிறுத்தப்படுள்ளதாகவும், நேரடி பயணங்களை தாண்டி மூன்றாவது நாடு வழியாக பயணிகள் வருவதால் அந்த நாடுகளுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர், கோலாலம்பூர், தோஹா, துபாய் வழியாக ஆஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாகவும், குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் அந்தந்த அரசுகளால் நிறுத்தி வைக்கப்பட்டு்ள்ளதாக அறிவதாகவும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இது சரியான முடிவு என்றும், இதன் மூலம் நேரடியான பாதிப்புகள் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தோஹா வழியாக வரும் விமானங்கள் எந்தவித தடையும் இன்றி இயக்கப்படுவதாக உறுதி அளித்துள்ளது. உரிய ஆவணங்கள், 48 மணி நேரத்துக்கு முந்தைய கோவிட் பரிசோதனை முடிவுகள் ஆகியற்றை கொண்டு தற்போதும் நீங்கள் இந்தியாவில் இருந்து தோஹா வழியாக ஆஸ்திரேலியா செல்லலாம் என கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் Adam Zampa, Kane Richardson ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்பியதை பல்வேறு தரப்பினரும் ட்விட்டரில் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3nAWqg0