முதற்கட்டமாக ஆஸ்திரேலியாவின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமாக 30 டன் அத்தியாவசி பொருட்கள் திமோர் லெஸ்ட்-ன் தலைநகரான டிலி-க்கு கொண்டு சேர்க்கப்பட்டது. மேலும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொலைதூர பகுதிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறது.
கடந்த ஈஸ்டர் ஞாயிறில் இருந்து கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழந்த நிலையில், பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேரழிவுக்கு பிந்தைய சேதங்களையும், மீட்பு நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மீட்புப் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.
அவசர தேவைகள், மருந்து, உணவுப்பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், கூரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திமோர் லெஸட்டேவுக்கு வழங்க 7 மில்லியன் டாலர் நிதித் தொகுப்பை மத்திய அரசு கடந்த ஞாயிறன்று அறிவித்துள்ளது.
விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்ட உதவி பொருட்களோடு மருத்துவ குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர். கடும் பாதிப்பை சந்தித்துள்ள தலைநகர் டிலியில் கூடுதல் முக்கியவத்துவம் அளித்து உடனடியாக மீட்புப் பணிகளை தொடர வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ள பாலங்கள், சாலைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளதாகவும், பாதிப்புகளுக்கு பிறகு 10 நாட்கள் கடந்தும் இன்னும் அரசாங்கள் பல கிராமங்களை, மலைப்பகுதிகளை சென்றடைய முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மீட்புப்பணிகளை வேகப்படுத்த இதுவே நேரம் என்றும், அதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆஸ்திரேலிய அரசு வழங்கும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதி அளித்துள்ளார்.