ரஷ்ய ராணுவத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ரகசியம் காக்கப்படுவது வழக்கம். அதனால் உக்ரைன் உடன் ஏற்பட்டு வரும் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒருமுறை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து இதுவரை வேறு எந்த புதிய தகவலையும் அந்நாடு வெளியிடவில்லை.
உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்யாவின் முயற்சிகள் இரு நாடுகளுக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார். இதுவரை நடந்து வந்த போரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை சமூகம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில் இந்த போர் உக்ரைனுக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இருக்கும் ராணுவ பலத்தை வைத்து ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது ரஷ்யா என்று வில்லியம் பர்ன்ஸ் குற்றஞ்சாட்டினார்.