கடந்த புதன்கிழமை சிட்னி துறைமுகத்தில் நின்றிருந்த சரக்கு கப்பலுக்கு அடியில் ஆணின் சடலம் மீட்கப்பட்டது. அப்போது அந்த உடலுக்கு இடையில் கொக்கைன் போதைப் பொருட்கள் அடங்கிய பல பாக்கெடுகள் நீரில் மிதப்பதை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் உயிரிழந்த ஆண் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும், கப்பலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுகுள் கடல் வழியாக வந்த போதைப் பொருட்களை எடுக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் துறைமுகத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உலாவிக் கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கும் உயிரிழந்த நபருக்கும் மீட்கப்பட்ட போதைப் பொருட்களும் சம்மந்தம் இருப்பது போல அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன்காரணமாக அவர்களை தேடும் பணியில் சிட்னி காவல்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் கப்பலில் போதை பொருட்களை கடத்துவதற்கு உதவியாக இருந்ததாக கூறி கேப்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என ஆஸ்திரேலியா காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.