ஆஸ்திரேலியாவில் சிறியளவில் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாக இருப்பது சாஃப்ட் பால். அமெரிக்காவில் விளையாடப்படும் பேஸ் பால் போன்ற தோற்றம் கொண்ட இந்த விளையாட்டை, ஆஸ்திரேலியாவில் பெண்கள் பலர் விளையாடி வருகின்றனர்.
இதை நிர்வகித்து வரும் முக்கிய அமைப்புகளில் ஒன்று சாஃப்ட் பால் ஆஸ்திரேலியா. கடந்த 2015-ம் ஆண்டு இந்த அமைப்பில் பணிக்கு சேர்ந்தவர் சோஃபி மூர். கடந்த 2017-ம் ஆண்டு இவ்வமைப்பு ஏற்படுத்திய சாஃப்ட் பால் விளையாட்டு தொடர்பான நிகழ்வில், தலைமை செயல் அதிகாரி ஜான் வெல்ஸ் என்பவரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அப்போதே, தான் வேலை பார்க்கும் அமைப்பில் சோஃபி மூர் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கு எந்தவிதமான பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அங்கிருந்து தனது வேலையை ராஜினாமா செய்த அவர், ஃபுட்பால் ஆஸ்திரேலியா அமைப்பில் உயரிய பொறுப்பில் உள்ளார்.
எனினும் அவருடைய புகார் தொடர்பாக இதுவரை சாஃப்ட் பால் அமைப்பு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து புகார் அடங்கிய தன்னுடைய கோப்புகளை உரிய அதிகாரிகளிடம் காட்டி வருகிறார். ஆனால் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்பது சோஃபி மூரின் வேதனையாக உள்ளது.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள தகவலில், ஆஸ்திரேலியாவில் சிறியளவிலான விளையாட்டுக்கு பெரிதாக மதிப்பு இருப்பது இல்லை. அதனால் அங்கு நடைபெறும் சம்பவங்கள், அதை தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பது இல்லை. தன்னுடைய விவகாரம் போல பல பெண்களுடைய வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அரசு உடனடியாக இதற்கு செவிசாய்க்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பெண்கள் முன்னேற்றம் பெரிய பின்னடவை சந்திக்கும் என்று சோஃபி மூர் வேதனையுடன் கூறுகிறார்.