ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியமைத்து ஒரு சில நாட்களே ஆகியுள்ளது. தாலிபான்களின் நிர்வாகத்தையும், பெண்கள் உரிமைகள் குறித்த நிலைபாட்டையும் உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
இந்நிலையில் தாலிபான்களின் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அப்துல் பாகி ஹக்கானி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளில் படிக்க எந்த தடையும் இல்லை என்று ஹக்கானி தெரிவித்துள்ளார். ஆனால் பெண்கள் அவர்களுக்கென்றுள்ள கல்லூரியில் தான் பயில வேண்டும் என்றும் இருபாலர், கல்லூரியில் படிக்க அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
1990 களில் இருந்த தாலிபான் அரசுக்கும் , தற்போதைய அரசுக்கும் ஏதேனும் கொள்கையளவில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதி கொடுக்கப்பட்டாலும், ஆடை கட்டுப்பாடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியது , சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் பெண்கள் எது போன்ற பாடங்களை படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹக்கானி, சர்வதேச அளவில் ஆப்கன் பெண்கள் போட்டியிடும் அளவில் பாடத்திட்டம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தாலிபான்களின் கடந்த ஆட்சியின் போது கலை, இசை போன்ற துறைகளில் பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது டோலோ செய்தி சேனலில் பெண்கள் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்கள் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் டோலோ செய்திக்கு பேட்டியளித்த செய்தி தொடர்பாளர், Syed Zekrullah Hashmi, பெண்கள் குழந்தை பெறவும் அவர்களை வளர்க்கவும் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார்.
ஆட்சியில் பெண்களுக்கு பங்களிப்பு இருக்கும் என்று தாலிபன்கள் தெரிவித்தாலும்,அவர்களுக்கு அமைச்சரவையில் பங்கு இருக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆட்சி காலத்தில் பல்கலைக்கழகங்களில் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடக்கக்கல்வி நிலையங்களில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கத்தாரை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர் தாலிபான் தலைவர்களுடன் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட பிறகு விமானம் ஒன்று காபூலில் இருந்து முதன்முறையாக வெளிநாட்டிற்கு இயக்கப்பட்டது .
இந்த விமானத்தில் 250க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
செயலிழந்து கிடந்த காபூல் விமான நிலையத்தை புணரமைக்க கத்தார் உதவியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் ஆப்கனிஸ்தான் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு 230 டாலர் மட்டுமே பணம் எடுக்க வேண்டுமென்று விதித்த கட்டுப்பாடு மக்களை கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளது.
Link Source: https://ab.co/3k93a4Y