விக்டோரியா மாநிலத்தில் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து விக்டோரியா வாசிகளுக்கு வேண்டப்படும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிட மாநில அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 3000 ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநில அரசு 33 மில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக 148 மக்கள் விக்டோரியா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் மற்றும் ராயல் ஆஸ்திரேலியன் மருத்துவக் கல்லூரி இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளன. மருத்துவ சங்கத்தின் தலைவர் ராட்ரிக் மெக்ரே மாநில அளவில் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த்துவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். வரும் நாட்களில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், தொடரும் உடல் உபாதைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் இந்த இலவச தடுப்பூசி திட்டம் வழிவகுக்கும் என விக்டோரியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் மார்டின் ஃபாய்லி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டது. மேலும் பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உடல்நலக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு இந்த இலவச தடுப்பூசி திட்டம் செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.