குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் தம்பதிகளை துப்பாக்கி காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
வெஸ்ட் பூட்ஸ்கேரி ராபார்ட் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. கடந்த மே 16-ம் தேதி இரவு 8.50 மணியளவில் அந்த கட்டிடத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து வெள்ளை நிற கார் ஒன்று வெளியேற முயன்றது. திடீரென்று காருக்கு முன்னால் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர், காருக்குள் இருந்தவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றார்.
இதனால் அச்சமடைந்த 27 வயதான கார் ஓட்டுநர், காரை திருப்பிக் கொண்டு வேறுபக்கம் செல்ல முயன்றுள்ளார். கார் திசை மாறிச் செல்வதை உணர்ந்த அந்த மர்ம நபர், உடனடியாக காரை துரத்திக் கொண்டு சென்றுள்ளான். ஆனால் நல்வாய்ப்பாக கார் வேறுபக்கத்தில் வெளியேறிச் சென்றுவிட்டது.
இதுதொடர்பாக அப்பகுதியிலுள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவலர்கள் விசாரணையை துவங்கினர். அதில் முதற்கட்டமாக துப்பாக்கியுடன் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் புகுந்த நபரின் அடையாளம் தெரியவந்துள்ளன. ஹூடு அணிந்து கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுக்கும் நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கார் வேறு பகுதியில் செல்வதற்கு முனைந்தபோது, அதை அந்த நபர் துரத்திக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் கையில் இருந்த துப்பாக்கியால் சுடவில்லை. அதற்காக அந்த நபர் வைத்திருந்தது பொம்மை துப்பாகி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் காரில் இருந்தவருக்கும் மர்மநபருக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. வழிப்பறி செய்ய முயன்ற சம்பவமாகவே இதை பார்க்க முடிகிறது. பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காவல்நிலையங்களுக்கு குற்றவாளியின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அவன் கைது செய்யப்படுவான் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.