மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது, ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. குறிப்பாக மது பான விடுதிகள், சூதாட்ட விடுதிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவை மீறி, கிரவுன் பெர்த் சூதாட்ட விடுதி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரிக்க ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது.
ராயல் கமிஷன் விசாரணைக்கு கிரவுன் பெர்த் சூதாட்ட விடுதியின் இயக்குனர் மெலிசா ஸ்மித் நேரில் ஆஜரானார். விசாரணையின் போது மெலிசாவிடம் கேள்வி எழுப்பிய விசாரணை குழுவின் ஆணையர் லிண்டா ஜென்கின்ஸ்,கோரோனா கட்டுப்பாட்டின் போது சூதாட்ட விடுதி இயங்கியதா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மெலிசா, கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போது சூதாட்ட விடுதியின் பிரதான தளம் மூடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பியர்ல் அறை திறந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சர் ரோஜர் குக் வெளியிட்ட அறிக்கையில் சூதாட்ட விடுதிகளும், மதுக்கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையை அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிரவுன் பெர்த் சூதாட்ட விடுதிக்கு ஏதேனும் தளர்வுகள் வழங்கப்பட்டதா என்பது குறித்த விவரங்களை இன்னும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த ஜூன் 27 ஆம் தேதி கிரவுன் பெர்த் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ஆஸ்திரேலிய மாகாண கொரோனா கட்டுப்பாட்டை தொடர்ந்து அனைத்து சூதாட்ட அறைகளும் மூடப்படுவதாக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதே நேரம் உணவு விடுதிகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிரவுன் பெர்த் பியர்ல் அறையில் உள்ள மின்னணு சூதாட்ட கருவிகளின் பொறுப்பாளராக உள்ள மெலிசாவின் கணவரான ரிச்சர்ட் ஸ்மித், ஊரடங்கில் அரங்கு செயல்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3zvxUkQ