பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நியூ கலிடோனியா தீவு மக்கள், சுதந்திரம் குறித்த மூன்றாவது வாக்கெடுப்பில் பிரான்சின் ஒரு பகுதியாக இருக்கவே அதிகளவில் வாக்களித்துள்ளனர், இந்த வாக்கெடுப்பை சுதந்திர ஆதரவு குழுக்கள் புறக்கணித்த நிலையில், அங்கு புதிதாக பதட்டங்கள் அதிகரித்துள்ளது.
வாக்கெடுப்பில், 96.49 சதவீதம் பேர் சுதந்திரத்திற்கு எதிராகவும், 3.51 சதவீதம் பேர் ஆதரவாகவும் வாக்களித்ததாக அத்தீவின் உயர் கமிஷன் தெரிவித்துள்ளது. “இன்று பிரான்ஸ் மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் நியூ கலிடோனியா அதன் ஒரு பகுதியாக இருக்கவே முடிவு செய்துள்ளது” என்று அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.
2018 மற்றும் கடந்த ஆண்டில் சுதந்திரத்தை நிராகரித்த பின்னர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை, நியூ கலிடோனியா “முழு இறையாண்மையை ஏற்றுக்கொண்டு சுதந்திரமாக மாற விரும்புகிறதா” என்று கடைசியாக ஒருமுறை பதிலளிக்க அத்தீவின் குடிமக்கள் அழைக்கப்பட்டனர்.
சுதந்திரவாத குழுக்கள் இவ்வாக்கெடுப்பை புறக்கணித்தனர். முன்னதாக,கொரொனா பீதி உச்சத்தில் உள்ள சூழ்நிலையில், பிரச்சாரங்களுக்கு வாய்ப்பில்லாததால் வாக்கெடுப்பை செப்டம்பருக்கு ஒத்திவைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அங்கு போரட்டங்கள் வெடிக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதால், பதட்டமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சிடம், 2.7 மில்லியன் மக்கள் வசிக்கும் 13 தனித்தனி தீவுப்பகுதிகள் உள்ளன, இவை பொதுவாக ஏழ்மை மற்றும் ஐரோப்பிய நாடுகளைவிட அதிகளவில் வேலையில்லா திண்டாட்டத்தினை சந்தித்து வருகின்றன. இப்பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்நிலையில் நியூ கலிடோனியா சுதந்திரவாத குழுக்கள் இந்த வாக்கெடுப்பின் முடிவை அங்கிகரிக்கவேண்டாம் என்றும், தாங்கள் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட உள்ளதாகவும் எச்சரிக்கைவிடுத்துள்ளன.
கொரோனாவின் முதல் அலையில் தப்பித்த இத்தீவு, டெல்டா வைரஸ் தாக்கத்தின் போது 300-க்கும் மேற்பட்ட உயிர் இழப்புகளை சந்தித்தது.
1980 களைப்போல சுதந்திரக்குழுக்களுக்கும், பிரான்ஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடிக்காலாம் என இப்பிராந்திய அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
Link Source: https://bit.ly/3dRkeZf