விக்டோரியாவின் மெல்போர்ன் பகுதியில் பரவி வரும் தொற்றால் , அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாகாணங்கள் விக்டோரியாவில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்படுகளை விதித்து வருகிறது.
அதன்படி விக்டோரியா மாகாணத்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு வருபவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாகாண அரசு அறிவித்துள்ளது. அதன் படி இந்த கட்டுப்பாடு ஜூன் 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
அண்மையில் விக்டோரியாவில் இருந்து நியூ சவுத் வெல்ஸ் மாகாணத்திற்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டது.
மே 19 முதல் 24 ஆம் தேதி வரை அவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு கடற்கரை பகுதிகளுக்கு சென்றுள்ளனர். 24 ஆம் தேதி விக்டோரியா சென்ற அவர்களுக்கு மே 25 ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்டுள்ளது. 31 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அக்குடும்பத்தினர் பயணம் செய்ய அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அவர்கள் பயணம் செய்த இடங்களையும், தொற்று பரவ வாய்ப்புள்ள நபர்களை கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துரிதப்படுத்தியுள்ளது.
ஜார்வீஸ் வளைகுடா, வின்செண்டியா போன்ற பகுதிகளுக்கு மே 19 முதல் 24 வரை பயணம் செய்த யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பரிசோதனை மையங்களையும் அரசு அதிகப்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 14595 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
18000 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/3fRw3Ay