ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனிமனிதர்களும், சமூகங்களும் சுய கட்டுப்பாடுடன் இருப்பது வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்றும், இது அரசின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சென்று கொண்டிருப்பதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். கோவிட் கட்டுப்பாடுகள், முகக் கவசம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து மாகாண ப்ரீமியர்கள், அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஒமைக்ரான் திரிபு வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான நடவடிக்கைகளை அனைத்து மாகாண அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. எல்லைகள் திறப்பு விவகாரத்தில் உரிய பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் விவகாரங்களில் தனிமனிதர்கள், குறிப்பிட்ட சமூகங்கள் தாங்களாகவே சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பெருந்தொற்று பாதிப்பு இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
உள்ளரங்க நிகழ்வுகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும், மாகாண அரசுகள் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கோடை காலங்களில் தொப்பி அணிவது, சன்ஸ்க்ரீம் போடுவதைப் போல நமது உடல் நலனை பேணுவதற்கு மாஸ்க் அணிவது அவசியமாகிறது என்றும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட மாகாணங்களில் விதிமுறைகள் வேறுபடுகிறது என்றும், பொது போக்குவரத்து, பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கூடுதல் தடுப்பூசி மையங்களை திறக்கவும் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது. இதுவரை 500 பேர் வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்க கூடுதல் தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3pjz2GC