மூத்த அரசு அதிகாரி ஜேன் ஹால்டன் தலைமையில் இயங்கவுள்ள இக்குழு, வரும் ஆண்டுகளில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக செய்யவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அராசாங்கத்துக்கு ஆலோசனைகள் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக பேசிய நிபுணர் குழுவின் தலைவர் ஜேன் ஹால்டன், கொரோனா தடுப்பு பணிகளுக்காக முன்னாள் அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அவைசார்ந்த நடவடிக்கைகள், அவற்றில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக இக்குழு அமைக்கப்படவில்லை. அடுத்து வரும் 12 முதல் 18 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்கு வேண்டி அரசாங்கம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மட்டுமே நாங்கள் ஆராய்ந்து ஆலோசனை வழங்கவுள்ளோம் என்று கூறினார்.
இதுதொடர்பாக அமைச்சர் மார்க் பட்லர் பேசுகையில், நாடு முழுவதும் இருப்பில் இருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், 2023-ம் ஆண்டு வரை நாட்டின் சுகாதார கட்டமைப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், கொரோனா தவிர நடைமுறையில் இருந்து வரும் மற்ற தடுப்பூசிக்கான ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகள் அல்லது அவை தொடர்பாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவது ஜேன் ஹால்டன் குழுவினரின் முக்கிய பணிகளாக இருக்கும் என்றார்.
சுகாதார அமைச்சர் மார்க் பட்லரின் இந்த மதிப்பாய்வு நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சங்கத்தின் தலைவர் ஓமர் கொர்ஷித், நோய் தடுப்பூசிகள் மற்றும் சிறந்த சிகிச்சைகளை மக்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இக்குழுவினர் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.