இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்வது போல், கர்ப்பணி பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் – 5 தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இந்தியாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுதல் தொடர்பாக பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்பதால், இந்தத் தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்படாமல் இருந்தன.
இந்நிலையில் கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசி நிலவரம் குறித்து ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவா கூறுகையில், ‘கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதனால், இனிமேல் கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பரில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25.37 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 5.42 கோடி பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 64,818 குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் 1,183 பேர் பலியாகினர். இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,83,143 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,93,085 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,94,493 ஆகவும், மருத்துவ சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,95,565 ஆகவும் உள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/35VBXdS