கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியா பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. பேரழிவு தரும் வறட்சி, பயங்கர காட்டுத்தீ மற்றும் கியூன்ஸ்லாந்து, மழை வெள்ள பாதிப்பு என இயற்கை சீற்றங்களால் ஆஸ்திரேலியா பந்தாடப்பட்டு வருகிறது.
கியூன்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளைச் சுத்தி வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் மக்கள் பலர் கூரைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் சீக்கியர்கள் சிலர் உதவி வருகின்றனர். சீக் வாலண்ட்டீயர்ஸ் ஆஸ்திரேலியா என்கிற பெயரில் இயங்கும் அவர்கள், ஒரு வாகனத்தில் உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசப் பொருட்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இதை வழிநடத்தி வரும் ஐஸ்விந்தர் சிங், மக்களுக்கு தரப்படும் இலவச உணவுகள் போதுமான சத்துகளுடன் தயாரிக்கப்படுகிறது. தொடர் பாதிப்பால் துவண்டுள்ள மக்களுக்கு இது பெரும் ஊட்டச்சத்தாக இருக்கும். மேலும் அவர்களுக்கு செயல்படுவதற்கான ஆற்றலை வழங்கும் என்று கூறினார்.