அமெரிக்காவில் அண்மையில் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பள்ளிக் குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. அமெரிக்காவில் தலைதூக்கி வரும் துப்பாக்கி பயங்கரவாதம் சர்வதேச நாடுகளை அச்சத்துக்கு உட்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கனடா நாட்டு அரசாங்கம் கைதுப்பாக்கிகளுக்கு தடை விதிப்பதற்கான வரைவுச் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நடப்பாண்டு இறுதியில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலம் கனடாவில் கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வது, வாங்குவது அல்லது விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் குற்ற தண்டனைக்கு உட்படுத்தப்படும். ஏற்கனவே கனடா பிரதமர் ஜஸ்டின் டுரேடோ, பொதுமக்களிடையே துப்பாக்கி பயன்பாட்டுக்கான நடைமுறைகளை எதிர்த்து வருகிறார். கனடா முழுவதும் 1500 வகையிலான ராணுவப் துப்பாக்கிகளை தடை செய்வதற்கு அவர் முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுபடுத்துவது மட்டுமில்லாமல், பெண்களை கொடுமைப்படுத்துவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது உள்ளிட்ட செயல்களை செய்வோருடைய துப்பாக்கி உரிமம் ரத்து செய்வதற்கான நடைமுறைகளும் சட்ட முன் வடிவில் இடம்பெற்றுள்ளது.