மெல்பேர்னிலுள்ள மோனாஷ் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திர சேகர் லங்கா மற்றும் சத்யா தாராபுரெட்டி தம்பதி. இவர்களுடைய 8 வயது மகள் அமிர்தா லங்காவுக்கு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வயிற்று வலி மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்ததால் மோனாஷ் பகுதியிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அமிர்தாவை கூட்டிச் சென்றனர். அங்கு இரண்டு மணிநேரம் காக்கவைக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து குழந்தைக்கு வயிற்றில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர் ஒருவர் சிறுமிக்கு இருப்பது குடல் அழற்சி கிடையாது. குழந்தை அமிர்தா இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 29-ம் தேதி இரவு 9 மணியளவில் பாதிப்பு சரியாவதற்கு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கொடுக்கப்பட்ட சிகிச்சையினால் கொஞ்சம் உடல்நலம் தேறிய அமிர்தா, ஏப்ரல் 30 காலை 10:17 மணியளவில் உயிரிழந்துள்ளாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தங்களுடைய மகளின் உயிர் பறிபோய்விட்டதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
மகளின் மரணம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காரணத்தை வெளியிடவில்லை. மருத்துவமனைக்கு அழைத்து வந்தவுடனே கவனித்திருந்தால் சிறுமி உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் மருத்துவமனை அலட்சியத்தாலும் உரிய சிகிச்சை தராததாலும் தற்போது தங்களுடைய மகள் தங்களை விட்டு போய்விட்டதாக பெற்றோர் சந்திர சேகர் லங்கா மற்றும் சத்யா தாராபுரெட்டி இருவரும் கதறி துடிக்கின்றனர்.
இதுதொடர்பாக பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். விக்டோரியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றுள்ளது. சிறுமி அம்ரிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரித்துள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக மோனாஷ் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.