நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்ட அதே நேரத்தில் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தது.
இதனால் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாகாண முதல்வர் கிளாடிஸ் பெர்ஜியாக்கிளின், மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1288 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொற்று பாதிப்பால் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும், மாகாண மக்கள் தொகையில் 70% நபர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது, ஓரளவு ஆறுதல் தருவதாக முதல்வர் கிளாடிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இனி உடற்பயிற்சி செய்வதற்கான நேரக் கட்டுப்பாட்டை தளர்த்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதே போல உடற்பயிற்சி செய்வதற்கும் ஒரு மணி நேரம் மட்டுமே தளர்வு கொடுக்கப்பட்டிருந்தது.
இதனை தளர்த்தியுள்ள முதல்வர் கிளாடியஸ், இனி உடற்பயிற்சி செய்ய எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பே சட், புர்வூட், கும்பர்லேண்ட், லிவர்பூல் போன்ற பகுதிகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தினசரி பதிவாகும் தொற்றில் 70% இந்த பகுதியில் இருந்து கண்டறியப்படுவதாக கிளாடியஸ் தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை வைரஸ் பரவலை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று மட்டும் சுமார் 1,21,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தில் இது வரை 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது 967 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/2WRtPKG