கடந்தாண்டு பிப்ரவரி மாதம் டட்டன் உள்துறை அமைச்சராக இருந்தபோது, நேரூ என்கிற பகுதியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்டு அதற்கு அவர் மன்னிப்புக் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் ஷானி பாஸி, தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் பீட்டர் டட்டனை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அதில் தன்னை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபராக ஷானி பாஸி குறிப்பிட்டு இருந்ததாக கூறி அவர் மீது 35 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் டட்டன். இதுதொடர்பான வழக்கில் முன்னதாக அமைச்சருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் டட்டனுக்கு ஏற்பட்ட கலங்கத்துக்கு அவர் கேட்கும் நஷ்ட ஈடு பணத்தை வழக்கறிஞர் பாஸி வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. இதை எதிர்த்து பாஸி மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான வழக்கு ஸ்டீவன் ரேர்ஸ், டார்ல் ரங்கையா, மைக்கேல் விக்னே அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஃபெடரல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், அமைச்சர் டட்டன் குறித்து பாஸி பதிவிட்ட ட்வீட்டில் அவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதனால் அமைச்சர் டட்டன் கோரும் நஷ்ட ஈடு பணத்தை வழக்கறிஞர் ஷானி பாஸி வழங்க தேவையில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஸி, தன்னுடைய வழக்கறிஞர் குழுவுக்கு நன்றி தெரிவித்தார். அரசியல் ரீதியாக கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. அதை மாற்று வழியில் வந்து தடுக்க நினைத்தால், உண்மை எப்போது வேண்டுமானாலும் வெளியே வரும் என்று தெரிவித்தார்.