கனடாவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொது இடங்களில் கூடி மக்கள் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தாக்கத்தில் நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்க்ட்டனில் பொதுமக்கள் பலரும் ஒன்று திரண்டு நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே கொரோனா தடுப்பூசிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையாமல் இருக்கும் பொருட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கமான போராட்டங்கள், கொரோனாவுக்கு அரசு எடுத்து வரும் நடவடிகைக்கு எதிராக முழக்கங்கள் போன்றவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தி வந்தனர்.
எதிர்பாராதவிதமாக கூட்டத்தில் இருந்த சிலர் காவல்துறையினர் மீது மனிதக் கழிவுகளை வீசி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் போலீசார் போராட்டத்துக்குள் புகுந்து கழிவுகளை வீசியதாக 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அபாயமான கிருமித் தொற்றை மக்களிடையே பரவச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை அன்று நியூசிலாந்தில் 2,377 பேருக்கு புதியதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 53 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து அவசர சிகிச்சையில் பலரு அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை கிடைத்து வருவதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3I90ei1