உள்நாட்டில் ஆட்டிறைச்சி விற்பனை துறை ஏற்றுமதியை நம்பியே உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்குள் ஆட்டுக்கறியை விரும்பி சாப்பிடுவோர் அதிகரித்துவிட்டனர். இதனால் உள்நாட்டில் அதற்கான தேவை அதிகரித்துவிட்டது
இதை உணர்ந்துகொண்ட குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த கீலை மற்றும் பிரையன் தம்பதிகள், கடந்த 2018-ம் ஆண்டு ஆடு வளர்ப்பு மற்றும் இறைச்சி துறையில் கால்பதித்தனர். பிரிஸ்பேன் பள்ளத்தாக்கு பகுதியில் வெறும் 30 ஆடுகளுடன் துவங்கப்பட்ட அவர்களுடைய வியாபாரம், இன்று பல்கி, பெருகி, வளர்ந்து வருகிறது.
குயின்ஸ்லாந்து தம்பதியின் வருகையை தொடர்ந்து, விக்டோரியாவின் பல்வேறு பகுதிகளில் போதுமான அளவில் ஆட்டிறைச்சி கிடைக்கிறது. வீடுகள், சிறியளவில் நடத்தப்படும் உணவகங்களில் மட்டுமில்லாமல் நட்சத்திர விடுதிகளை நடத்தும் நிறுவனங்களும் இவர்களிடம் ஆட்டிறைச்சி பெற்று செல்கின்றனர்.
இதுதொடர்பாக பேசிய ஆட்டிறைச்சி வியாபாரியான எட் ஹல்மாகி, கடந்த ஆண்டுகளில், ஆடு இறைச்சி ஆஸ்திரேலிய உணவில் மிகவும் பிரதானமாக இருந்தது. இது மிகவும் மலிவு மற்றும் உடனே கிடைக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் ஆட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் அது கைவிடப்பட்டது. என் மனைவியுடன் இந்த துறையில் நான் கால்பதித்த பிறகு, மீண்டும் விக்டோரியாவில் ஆட்டிறைச்சி பரவலாக கிடைத்து வருகிறது. உரிய காலமும் திட்டமிடுதலே இதற்கு முக்கிய காரணம் என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவின் ஆடு தொழில் ஒப்பீட்டளவில் சிறியது தான். உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்தாலும், உலகளாவிய ஏற்றுமதியில் 27 சதவீத பங்கை மட்டுமே ஆஸ்திரேலியா கொண்டுள்ளது. கடந்தாண்டில் ஆடு தொழில் மூலம் 34 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. மொத்தம் 20,847 டன் ஆட்டுக்கறியை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது ஆஸ்திரேலியா.