உலகளவில் மிகுந்த பணக்கார நகரங்களில் ஒன்று ஷாங்காய். சீன பொருளாதாரத்தில் தலைநகரமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. ஆனால் கொடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஷாங்காய் முழுவதும் மக்கள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி, பெரும் செல்வந்தர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் கொரோனா ஊரடங்கால் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
ஷாங்காயின் வசிக்கும் திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் வீசேட்டில் குழு ஒன்றை அமைத்து, அதன்மூலம் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள தொழிலதிபர்களும், இதுபோன்ற நெருக்கடி நிலையை சந்தித்து வருவது கவலை அளிக்கிறது. சீனாவின் பிரபல தொழிலதிபரான சூ, இணையதளம், சமூக வலைதளம் மற்றும் வீ சேட்டில் உணவு மற்றும் மளிகை பொருட்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தனது குடும்பம் மட்டுமில்லாமல், சொந்த மகனின் நண்பர்கள் குடும்பத்தையும் கவனித்து வருவதாகவும், அதனால் உணவு தேவை உடனடி தேவை என்றும் அவர் வீ சேட்டில் பதிவிட்டுள்ளது சீனா முழுக்க பரபரப்புச் செய்தியாகியுள்ளது.
கொரோனா பாதித்து பெரிய பெரிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முறையாக மருந்து வழங்கப்படுவது இல்லை. அதேபோன்று அவர்களுக்கு போதிய உணவும் கிடைப்பதில்லை. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.